இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற நால்வர் கைது-
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கியூ பிரிவு பொலிஸாரால் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 7 கிலோ கஞ்சாவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டத்தின் இராமேஸ்வரம் – தியாகராஜன் (வயது 47), தங்கச்சிமடம் – குரு என்ற ஹரிராமச்சந்திரன் (வயது 30), மதுரை – தமிழரசன் ( வயது 26), இராமேஸ்வரம் – கண்ணன் (வயது 55) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.
தியாகராஜன், ஹரிராமச்சந்திரன், தமிழரசன், கண்ணன் ஆகிய நால்வரும் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் திருப்புல்லாணி விலக்கு அருகே, ஹகியூ’ பிரிவு பொலிஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், அவ் வழியாக வந்த இவர்களது காரும், சோதனையிடப்பட்டது. இதன்போது, நால்வரும் சந்தேகப்படும் வகையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, இவர்களிடம் நடத்திய விசாரணையில், இலங்கைக்கு கஞ்சா கடத்துவதற்காக இராமேஸ்வரத்தில் உள்ள புஷ்பம் தன்ராஜ் என்பவரைச் சந்திக்க செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து, அனைவரையும் கைது செய்த பொலிஸார், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் அதிலிருந்த 7 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்
Average Rating