எகிப்து கலவரம்: பலியானோர் எண்ணிக்கை 638ஆக உயர்வு..!!
எகிப்தில், நேற்று முன்தினம் போலீசாருக்கும், மோர்சி ஆதரவாளர்களுக்கும் இடையே உண்டான மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 638 ஆக உயர்ந்துள்ளது.
இந்தக் கலவரம் குறித்து ஐ.நா பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட உள்ளது.சமீபத்தில், எகிப்தில் அதிபர் மோர்சி மக்களுக்கு எதிராக செயல் படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பதவியிறக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, மோர்சியின் ஆதரவாளார்கள் ஒன்று கூடி மோர்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.அந்தவகையில், நேற்று முன்தினம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் முகாமிட்டிருந்த மோர்சியின் முஸ்லிம் பிரதர்குட் இயக்கத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தினர் பாதுகாப்புப்படையினர். அதில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் பலர் பலியானார்கள் மற்றும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
நேற்றிரவு நிலவரப்படி பலியானவர்களின் எண்ணிக்கை 638ஐத் தொட்டுள்லது. மேலும், பலியானவர்களின் எண்ணிக்கை கூட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
எகிப்து கலவரம் பற்றிக் கேள்விப்பட்ட ஐ.நா சபை உடனடியாக ரகசிய கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அக்கூட்டத்தில் இந்தக் கலவரம் குறித்து நேர்மையான விசாரணை நடத்தப் பட வேண்டும் என ஐ.நா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Average Rating