மீளாத் துயரிலிருக்கும் றிஸானாவின் பெற்றோரை புண்படுத்தும் குரல்கள்..!!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூதூர், சாபி நகரைச் சேர்ந்த றிஸானா நபீக்கினுடைய பெற்றோர், தமக்கு ஒரு சில வாரங்களாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கிடைக்கப் பெறும் தொலைபேசி அழைப்புக்கள் தமது மனதை புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
‘நான் இன்னும் எனது மகள் றிஸானா வின் கவலையிலிருந்து மீளவில்லை. இந்த நேரத்தில் எனக்கு இனந்தெரியாத சில தொலைபேசி இலக்கங்களிலிருந்து உங்களுக்கு எத்தனை வீடு கட்டி தந்துள்ளனர்.
எத்தனை கோடி ரூபா வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது’ என கேட்பதாக றிஸானா நபீக்கின் தாயார் தெரிவித்துள்ளார்.
‘இந்தத் தொலைபேசி அழைப்புக்கள் வருவது என்னையும் எனது கணவரையும் மேலும் கவலையடையச் செய்யும் வண்ணம் உள்ளது.
எமது நாட்டு அரசியல்வாதிகளும், தனவந்தர்களும், பொதுமக்களும் இன, மத பேதங்களுக்கு அப்பால் உதவி செய்திருக்கின்றார்கள்.
அத்தோடு இலங்கை இராணுவத்தினரால் வீடொன்று அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்.
ஆனால் மற்றையவர்கள் நினைப்பது போன்று இறைவன்மீது ஆணையாக கோடிக் கணக்கான ரூபாக்கள் எமக்கு வரவில்லை.’
‘எனவே தான் எனது மகளை நினைத்து இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் எமது குடும்பத்தை மேலும் கவலையடையச் செய்ய வேண்டாம்’ என றிஸானாவின் தாயார் கோரியுள்ளார்.
Average Rating