சுறாக்களை வசியப்படுத்தும் சுழியோடி..!!
ஆபத்தான விலங்குகளாகக் கருதப்படும் சுறாக்களை சுழியோடி ஒருவர் வசியப்படுத்தி அவற்றை தனது உள்ளங் கையில் ஏந்தியிருக்கும் காட்சியை மற்றொரு சுழியோடி ஒருவர் படம் பிடித்துள்ளார்.
டொம் என்ற பெயருடைய மேற்படி சுழியோடி சுறாவை ஹிப்னாடிஸ முறையில் வசியப்படுத்தும் கலையை கற்றுள்ளாராம். சுறாவின் மூக்கை மென்மையாக தடவுவதன் மூலம் சுறாவை வசியப்படுத்தி அதை தற்காலிகமாக நடமாட முடியாமல் செய்யும் ஆற்றலை அவர் கொண்டுள்ளார்.
சுமார் 15 நிமிட நேரம் சுறாக்கள் இவ்வாறு அசையாமல் நிற்கின்றன. இதனால் சுறாவுக்கு தீங்கு எதுவும் ஏற்படுவதில்லை என டொம் கூறுகிறார். அச்சுறாக்கள் டொம்மின் கரங்களுக்கு முற்றாக கட்டுப்பட்டுவையாக காணப்பட்டன என பஹாமஸ் நாட்டின் கடற்பகுதியில் இப்புகைப்படங்களைப் பிடித்த கிரஹம் கிப்ஸன் தெரிவித்துள்ளார்.
31 வயதான கிரஹம் அமெரிக்காவைச் சேர்ந்த வர்த்தத்துறை மாணவராவார். இவர் விடு முறைக்காக பஹாமஸுக்கு சென்றபோது இப்புகைப்படங்களை பிடித்துள்ளார்.
டொம் வசியப்படுத்திய சுறாவின் உடலை தானும் தொட்டுப்பார்த்ததாக கிரஹம் கிப்ஸன் தெரிவித்துள்ளார். எனினும், மனிதர்களுக்கு சுறாக்கள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விலங்குகள் என்பதை நினைவில் கொள்வது அவசியம் என அவர் எச்சரிக்கிறார்.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலுள்ள நீரியல் பூங்காவொன்றில் பணியாற்றும் டாக்டர் ரொப் ஜோன்ஸ் இந்த வசியக் கலையை நீண்டகாலமாக பயன்படுத்தி வருகிறார்.
சுறாக்களில் இரத்தம், உயிரணு போன்றவற்றை பெறுவதற்காகவும் வேறு பரிசோதனைகளுக்கும் டாக்டர் ரொப் ஜோன்ஸ் வசிய முறைமையை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating