சீனாவில் அணைகள் உடைப்பு..!!
சீனாவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் வரலாறு காணாத பெரும் மழைக்கு 75க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
இப்பகுதிகளில் அணைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் லட்சக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
லியானிங் மாகாணத்தில் உள்ள புஷ்கூன் நகரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இங்கு இடைவிடாத மழை பெய்துகொண்டு இருக்கிறது.
ஒரே நாளில் 400 மி.மீ. மழை பெய்திருப்பது அண்மை கால வரலாற்றில் இதுவரை இல்லாதது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் காரணமாக புஷ்கூன் நகரில் வர்த்தகம் உள்ளிட்ட மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ஒரு லட்சத்து 39 ஆயிரம் வீடுகள் சேதமடைந்து இருப்பதாகவும், 350 வீடுகள் அடியோடு இடிந்து விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் ஹெக்டேர் பரப்பரளவில் வேளாண் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடப்பதால் நாட்டின் பொருளா தாரத்திற்கு 340 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர்.
இப்பகுதியில் மீட்புப்பணியில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டு இருப்பதாகவும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதாகவும் சீனாவின் ஷின்குவா செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.
சீனாவில் அண்மைக் காலமாக அடிக்கடி பூகம்பங்களும், பெரும் மழை வெள்ளமும் ஏற்பட்டு வருகிறது. இப்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் மீட்பு நடவடிக்கை எடுப்பதற்காக ராணுவத்தின் ஹெலி காப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
Average Rating