கூட்டமைப்பு வேட்பாளரின் வாகனம்மீது தாக்குதல்..!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் தம்பிராசாவின் வாகனத்தின் மீது யாழ். மின்சார வீதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் வேட்பாளர் தம்பிராசாவுக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்களின் கட்சி ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இவர் போட்டியிடுகின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்; சார்பில் போட்டியிடும் தான் தனது பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் பொலிஸ் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தம்பிராசா இன்று தெரிவித்திருந்த நிலையிலேயே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் புலனாய்வாளர்கள் தன்னை அச்சுறுத்துவதாக அவர் தெரிவித்திருந்தார்.
காரைநகர் பிரதேசத்தில் பிரச்சார நடவடிக்கைகளை முடித்துவிட்டு எனது உறவினர்களுடைய வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது எனது வாகனத்தை பின்தொடர்ந்த பொலிஸ் புலனாய்வாளர்கள் இருவர் என்னை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.
இவ்வாறு நீண்ட தூரம் பின்தொடர்ந்து வந்த அவர்களிடம் ஏன் பின்தொடர்கிறீர்கள் என்று கேட்டேன். இதற்கு அவ்விருவரும் பதிலளிக்கவில்லை.
இது தொடர்பில் அறிவிக்க யாழ் பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டபோது அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து அவருக்கு அடுத்த நிலையிலுள்ள பொறுப்பதிகாரிக்கு சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தியிருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார் வேட்பாளர் தம்பிராசா.
Average Rating