விமானத்தின் இறக்கைமீது பயணித்து புதிய சாதனை படைத்த சிறுமிகள்..!!
பிரித்தானியாவைச் சேர்ந்த 9 வயதான இரு சிறுமிகள் விமானத்தின் இறக்கையில் நின்றவாறு பயணித்து புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.
பிரித்தானியாவின் ரோஸ் பவல் மற்றும் பிளேம் பரெவர் என்ற 9 வயதான சிறுமிகளே இச்சாதனைக்குச் சொந்தக்காரர்களாவர். இச்சிறுமிகள் இருவரும் சகோதரிகளாவர்.
இச்சகோதரிகள் தமது குடும்பத்தில் விமானத்தின் இறக்கையில் பயணிக்கும் 3ஆவது சந்ததியினராம். இச்சாதனை பயணத்தினை 6 வயதிலிருந்தே மேற்கொள்ள இவர்கள் ஆர்வமாக இருந்துள்ளனர்.
ஆனால் தற்போது இந்த ஆபத்தான சாதனையை தசை தேய்வு தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களது தோழன் எல்லியின் உயிரைக் காப்பாற்ற நிதி சேகரிக்கும் நோக்கில் ஒரு விழிப்புணர்வு பயணமாகவே மேற்கொண்டுள்ளனர்.
வெற்றிகரமான பயணத்தின் பின்னர் ரோஸ் பேசுகையில், பயணம் மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. உண்மையில் அது எவ்வாறானது என விபரிப்பது கடினமானது. பறவையில் பயணித்தது போல இருந்தது.
உயரத்தில் செல்லும் போது சற்று பயமாக இருந்தது. ஆனாலும் நான் உயரத்தில் இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆகாயத்தில் இருக்கும் போது வீடுகள் எல்லாம் சிறுவர்கள் கட்டிவிளையாடும் வீடுகள் போல இருந்தது.
கடும் குளிராக இருந்தது. இப்போது நான் நடுங்குகிறேன். இந்த பயணத்தால் நான் பெருமையடைகின்றேன். மீண்டும் ஒரு தடவை இதனைச் செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
‘நாங்கள் இருவரும் இணைந்து இளவயதில் விமான சிறகில் பயணித்தவர்கள் என்ற சாதனையுடன் எல்லிக்கும் உதவுவதற்கு முன்வந்தோம். இது கடும் இரைச்சலான பயணமாக இருந்தது’ என பிளேம் கூறியுள்ளார்.
எல்லியின் தாயும் , தசை தேய்வு தொடர்பான சிறுவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள டச்சன் சில்ரன்ஸ் ட்ரஸ்ட் அறக்கட்டளை அமைப்பின் நிறுவுனருமான எமிலி க்ரொஸ்லி கூறுகையில், ‘இச்சாதனையுடன் எங்களது அறக்கட்டளை தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்திய இந்த சிறுமிகளால் நாங்கள் பெருமையடைகின்றோம் ‘என்றார்.
மணிக்கு 100 கி.மீ வரை வேகமான விமானத்தைச் செலுத்தியது அவர்களது தாத்தாக்களாகும். இவர்களில் நோர்மன் என்பவர் கூறுகையில், ‘பேரப்பிள்ளைகள் என்பதால் மிகக் கவனமாகச் செயற்படவேண்டி இருந்தது.
பல முறை இப்பயணத்தை மேற்கொள்ள அவர்கள் விரும்பியபோதும் முன்னர் நான் அவ்வாறானதைத் தவிர்த்தேன்’ இம்முறை அவர்களின் நோக்கத்தை கருத்திற்கொண்டு ஒப்புக்கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
Average Rating