இலங்கை கடலில் பயங்கர சண்டை: 25 புலிகள், 4 கடற்படையினர் பலி
மன்னார் வளைகுடா அருகே நடுக்கடலில் இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளின் கடற் புலிகள் பிரிவினருக்கும் இடையே நடந்த பயங்கர மோதலில் 25 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. இது குறித்து ராணுவத்தினர் கூறுகையில், மன்னார் அருகே போசலையில் உள்ள போலீஸ் முகாமை 11 பைபர் கிளாஸ் படகுகளில் வந்த புலிகள் அதிகாலையில் தாக்கினர். இதையடுத்து ராணுவம், கடற்படை, விமானப் படையினர் நடத்திய கூட்டுத் தாக்குதலில் 25 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். மேலும் 4 கடற்படை வீரர்களும் பலியாயினர் என்றனர். இந்தத் தாக்குதலில் இலங்கை விமானப் படை ஹெலிகாப்டர்களும் பங்கேற்றன.
ஆனால் இது குறித்துப் புலிகள் கூறுகையில், இன்று காலை கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையே மோதல் நடந்ததைத் தொடர்ந்து போசலை அருகே பொது மக்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பொது மக்கள் நூற்றுக்கணக்கில் புனித மேரி ஆலயத்திலும் புனித பாத்திமா பள்ளியிலும் அடைக்கலம் புகுந்தனர் என்றனர். இதைத் தொடர்ந்து தேவாலயத்தின் மீதே கடற்படையினர் கிரனைட் தாக்குதலை நடத்தினர். இதில் ஒரு பெண் பலியானார், 44 பேர் படுகாயமடைந்தனர். மேலும் தமிழ் மீனவர்கள் 4 பேரையும் கடற்படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந் நிலையில் கொழும்பு அருகே புலிகளின் படகு ஒன்று இன்று அதிகாலை வெடித்துச் சிதறியதாகவும் அதிலிருந்து தப்பிய இரு புலிகள் சயனைட் உண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கிளிநொச்சி பகுதியில் விமானப் படையினர் நேற்று இரவும் குண்டு வீசித் தாக்கினர். இதில் பல பொது மக்கள் காயமடைந்துள்ளனர்.