ஒசாமா பின்லேடனை காட்டிக்கொடுத்த பாகிஸ்தான் டாக்டருக்கான சிறை தண்டனை ரத்து..!!
பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதியில் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க ‘சீல்’ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஒசாமாவின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க பாகிஸ்தானில் வசிக்கும் டாக்டர் ஷகில் அஃப்ரிடி என்பவர் அமெரிக்காவின் உளவுப்படையான சி.ஐ.ஏ.க்கு உதவியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள லஷ்கர்-இ-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பிற்கு நிதியுதவி செய்ததாக டாக்டர் ஷகில் அஃப்ரிடி கைது செய்யப்பட்டார்.
ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த அபோட்டாபாத் பகுதியில் சி.ஐ.ஏ. உதவியுடன் போலியாக, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஷகில் அஃப்ரிடி மீது கைபர் நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசத்துரோக வழக்கில் அவருக்கு 33 ஆண்டு சிறை தண்டனை வழங்கி மாஜிஸ்திரேட் அளவில் உள்ள நீதிபதி தீர்ப்பளித்தார்.
தற்போது, பெஷாவரில் உள்ள சிறையில் அவர் தண்டனை அனுபவித்து வருகிறார்.
தன்னாட்சி உரிமை இல்லாத கைபர் மாகாணத்தின் நீதிபதிக்கு தேசத்துரோக குற்ற வழக்கை விசாரிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 22 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கவும் அதிகாரம் இல்லை என்று சட்ட நிபுணர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இந்த தண்டனையை எதிர்த்து முறையீடு செய்தனர்.
தண்டனை வழங்கிய நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி விட்டார். எனவே, இந்த தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என எல்லை கடந்த குற்றம் தொடர்பான ஒழுங்குமுறை ஆணையத்தில் அவர்கள் வாதாடினர். இதனையடுத்து, கைபர் நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து ஷகில் அப்ரிடி மீதான வழக்கை வேறு நீதிபதி மீண்டும் விசாரிக்க வேண்டும் என இந்த ஆணையத்தின் கமிஷனர் சாஹிப்சாதா முஹம்மது அனீஸ் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கை மறு விசாரணை செய்யவுள்ள புதிய நீதிபதியின் உத்தரவுப்படி தான் அவர் விடுதலை செய்யப்படுவார் என தெரிகிறது.
சமீபத்தில் பாகிஸ்தான் சென்றிருந்த அமெரிக்க அதிகாரிகள் அஃப்ரிடியை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது
Average Rating