தமிழர்களை நாடு கடத்தும் திட்டம், சுவிஸ் இடைநிறுத்தம்..!!
சுவிஸில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை தமிழர்களை நாடு கடத்தும் திட்டத்தை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.
இலங்கையில் அவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளமையின் காரணமாக நாடு கடத்தும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, சுவிஸ் சமஸ்டி குடியேற்ற பணியகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் முயற்சியில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும், சுவிஸ் ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டுக்குப் பின்னர், சுவிஸ் அரசாங்கம் இதுவரை 24 பேரை பலவந்தமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளது,
120 பேர் சொந்த விருப்பத்தின் பேரில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.
கடந்த மாதமும் சுவிஸிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருந்த யாழ். அராலியைச் சேர்ந்த திருமணமாகிய இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதாகியுள்ளார்.
அதன் பின்னர் அவர் 4ம் மாடிக்கு கொண்டுசெல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனையடுத்து யாழிலுள்ள அவரது மனைவி கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் 50,000 பேர் வரையில் சுவிஸில் வாழ்கின்றனர். இவர்களில் 3,000 பேர் தஞ்சக்கோரிக்கை விடுத்துள்ளனர்.
2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை 1,800 இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
Average Rating