ஆட்சிக்கு வந்தால் அகதிகள் கடத்தல் தடுக்கப்படும் – அஸி. லிபரல் கட்சி..!!
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை வலுப்படுத்த புதிய கொழும்பு திட்டம் செயற்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய லிபரல் கட்சி தெரிவித்துள்ளது.
சிட்னியில் வைத்து ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவுஸ்திரேலிய லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் எலக்சேன்டர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள உறவை வலுப்படுத்த புதிய கொழும்புத் திட்டம் மாற்றத்தை கொண்டுவரும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
புதிய கொழும்பு திட்டத்தின் மூலம் ஆசிய பசுபிக் வலயத்திற்கு இளையவர்கள் கற்றலுக்கு அனுப்பப்பட்டு சிறந்த திறமையுடையவர்களாக அவர்கள் உருவாக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த திட்டம் 2015இல் ஆரம்பிக்கப்படும் என கூறிய அவர், புதிய கொழும்பு திட்டத்திற்கு இது உண்மையான வழியாக அமையுமெனவும் கூறியுள்ளார்.
அகதிகள் பிரச்சினையானது அவுஸ்திரேலிய – இலங்கைக்கு இடையில் பாரிய அரசியல் பிரச்சினையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
திட்டமிடப்பட்ட அகதிகள் கடத்தல் வர்த்தகம் அகதிகள் பிரச்சினை அல்ல என ஜோன் எலக்சேன்டர் தெரிவித்துள்ளார்.
லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்தால் அகதிகள் கடத்தலை தடுக்க வலயமட்ட பாதுகாப்பு திட்டம் தீட்டப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்தால் அகதிகள் கடத்தலை தடுக்க திறமையான குடியேற்ற கொள்கை என்ற பெயரில் இலங்கை, இந்தோனேசியா மற்றும் மலேசியாவுடன் இணைந்து செயற்பட 67 மில்லியன் டொலர் செலவிடப்படும் என ஜோன் எலக்சேன்டர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating