ஜி 20 நாடுகள் மாநாடு.. பன்னாட்டு நிறுவன வரி ஏய்ப்பை தடுக்க பிரகடனம்..!!
ஜி-20 நாடுகள் உச்சி மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்பை தடுக்க வகை செய்யும் பிரகடனம் வெளியிடப்பட்டிருக்கிறது.
உலகளவில் பொருளாதாரத்தில் முதல் 20 இடங்களை வகிக்கிற ஜி-20 நாடுகளின் உச்சிமாநாடு ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது.
பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டின் முடிவில் 27 பக்கங்களை கொண்ட பிரகடனம் ஒன்றை வெளியிடப்பட்டது.
அதில், எல்லை தாண்டிய வரி ஏய்ப்பு, தவிர்ப்பு ஆகியவை நாடுகளின் பொது நிதிநிலையையும், வரி முறையில் நேர்மை என்பதில் மக்களின் நம்பிக்கையையும் பலவீனப்படுத்தி விடுகிறது.
பொருளாதார செயல்பாடுகளில் இருந்து லாபத்தை பெறுகிறபோது அதற்கு கண்டிப்பாக வரி விதிக்கப்படவேண்டும். வரி ஏய்ப்பை சமாளிக்கிற விதத்தில் சட்டவிதிகளில் தேவையான மாற்றங்களை செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் சரிந்து நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
நிதி வரத்துக்களில் ஏற்பட்ட கூடுதலான ஊசலாட்டம், அன்னியச்செலாவணி சந்தை ஒழுங்கின்மை வளர்ந்து வருகிற நாடுகளின் பொருளாதாரத்தையும், நிதி நிலைமையையும் பாதித்து விடும், இதைத் தவிர்க்கிற வகையில் வலுவான கொள்கைகளை வகுக்க வேண்டும்’ என்ற இந்தியாவின் கருத்து ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் ஏற்கப்பட்டது.
Average Rating