தமிழர் பகுதியில் குண்டு வீச்சு நீடிப்பு
நேற்று முன்தினம், சிங்களர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அனுராதபுரம் மாவட்டத்தில் பயணிகள் பஸ் கண்ணிவெடி மூலம் தகர்க்கப்பட்டதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 64 பேர் பலியானார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, நடைபெற்ற பெரிய தாக்குதல் இது. விடுதலைப்புலிகள்தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்று குற்றம் சாட்டி, தமிழர் பகுதியில் இலங்கை ராணுவம் உடனடியாக தாக்குதலை தொடங்கியது. திரிகோணமலை, வவுனியா பகுதியில் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. விடுதலைப்புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியிலும் தாக்குதல் நடந்தது. இதன்மூலம் எந்த நேரத்திலும் இலங்கையில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.
பஸ் தகர்ப்பில் பலியானவர்களின் உடல்கள் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதும் தமிழர் பகுதியில் 2-வது நாளாக தாக்குதல் தொடர்ந்தது. வடக்கு, கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளின் முகாம்களை குறி வைத்து ஜெட் ரக போர் விமானங்கள் குண்டுகளை வீசின. கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் விமான குண்டுவீச்சு நடந்தது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த விடுதலைப்புலிகளின் அமைதிச்செயலக தலைவர் புலித்தேவன், “அரசு போருக்கு தயாராகிவிட்டதையே இது காட்டுகிறது” என்றார்.
விமான தாக்குதல் காரணமாக கிளிநொச்சியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. விடுதலைப்புலிகள் சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெளியான அறிவிப்பில், பொதுமக்கள் அனைவரும் ராணுவப்பயிற்சிக்கு வரும்படி அழைப்பு விடப்பட்டது.
இதற்கிடையில் பஸ் தகர்ப்பு சம்பவத்துக்கு அமெரிக்கா உள்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், இந்த சம்பவத்துக்கு விடுதலைப்புலிகளே காரணம் என்றும், இது அப்பட்டமான போர் நிறுத்த ஒப்பந்த மீறல் என்றும் குற்றம் சாட்டினார்.
பஸ் தகர்க்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட இலங்கை ஜனாதிபதி ராஜ பக்சே, இத்தகைய நடவடிக்கைகளால் அமைதிமுயற்சியை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.