பொல்லால் தாக்கி ஒருவர் கொலை, சந்தேகநபர் விளக்கமறியலில் தடுத்து வைப்பு
கேகாலை மாவட்டம் ஹெம்மாதகம பொலிஸ் பிரிவின் அலதெனிய சந்தியில், பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 8ம் திகதி தலையில் பொல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், நேற்றையதினம் (11) இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடுவாவல ஹெம்மாதகம பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
மேலும் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற மோதல் ஒன்றின் போதே இவர் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் பள்ளிபேருவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்றையதினம் மாவனெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 23ம் திகதி வரை (2013.09.23) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹெம்மாதகம பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating