பிரபாகரனின் கொள்கைகளையே கூட்டமைப்பு முன்வைத்துள்ளது: ஜனாதிபதி
ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி இந்த நாட்டில் நிர்வாகத்தைக் கொண்டு செல்வதற்காக நாட்டின் ஏனைய பகுதிகளில் வழங்கியுள்ள உரிமைகளை வடக்கிலும் நாங்கள் வழங்கியுள்ளோம்.
ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் நான்கு வருடங்களுக்கு முன்னர் பிரபாகரன் கொண்டிருந்த கொள்கைகளை முன்வைத்திருக்கின்றார்கள்.
இந்த நாட்டைத் துண்டாடுவதற்கு பிரபாகரனுக்கு இடமளிக்காததைப் போன்று யாருக்கும் நாம் இடமளிக்கப் போவதில்லை என்பதை அவர்களுக்கும் உங்களுக்கும் விசேடமாகக் கூறி வைக்க விரும்புகிறேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் அன்று கொண்டிருந்த கொள்கையினால் ஏற்பட்ட பலன்கள் என்னவென்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். கையிலகப்பட்டதை எடுத்துக்கொண்டு செல்லும் வகையில் அன்று முஸ்லிம் மக்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
அதற்கு முன்னதாக சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டார்கள்.
அத்தகைய ஒரு நிலைமை மீண்டும் இங்கு உருவாகுவதற்கு இடமளிக்க முடியாது. அச்சமற்ற ஒரு சூழ்நிலை இப்போது உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதனை இல்லாமல் செய்வதற்கு எவரும் விரும்பமாட்டார்கள் என்றும் ஜனாதபதி கூறியுள்ளார்.
வடக்கின் நிர்வாக நகரம் மாங்குளம் பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்றது. அதில் உங்களுக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படும். வடக்கின் வசந்தம் ஊடாக உங்கள் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. வடக்கின் வசந்தம் என்பது உங்கள் வசந்தமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா வைரவப்புளியங்குளம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Average Rating