இந்திய மாநில கூட்டமைப்பு போல இலங்கையில் உருவாக்கவேண்டும்- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
இலங்கைக்குள் தமிழ்மக்களுக்கு இந்திய மாநிலங்களை போன்ற அதிகார பகிர்வு ஒன்றை உருவாக்கவேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கை வடமத்திய மாகாணம் கெப்பிட்டி கொல்லாவ என்ற இடத்தில் புலிகளின் கொடூரத்தாக்குதலில் பஸ்சில் பயணம் செய்த சிங்கள பெண்கள், குழந்தைகள் என 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமானவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் தமிழகத்திற்கு அகதிகளாக புலம்பெயரும்படியான நெருக்கடிநிலையொன்றை ஏற்படுத்த முனைகிறார்கள். இதன் மூலம் இந்தியாவிற்கு சங்கடமான சூழ்நிலையையும், தமிழக மக்கள் மத்தியில் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் ஏற்படுத்த பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, பத்மநாபா, டெலோ தலைவர் சிறீசபாரத்தனம், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களை படுகொலை செய்தவர்கள் கடந்த 20 ஆண்டுளில் தமிழ் மக்களின் அத்தனை முக்கிய தலைவர்களையும் கொன்றொழித்து விட்டார்கள். இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் ஜனநாயகம் இல்லை. வேறுபட்ட கருத்துக்களுடன் மனிதர்கள் வாழ்வதற்கு உரிமைகள் இல்லை. தாம் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு அமைதிக்கான அனைத்து சந்தர்ப்பங்களையும் வீணடித்து வருகிறார்கள்.
இந்தியா ஈழத்தமிழர்களை, இலங்கை மக்களை ஆதரிக்க வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ்மக்களுக்கு இந்திய மாநிலங்களை போன்ற அதிகாரப்பகிர்வு கட்டமைப்பு ஒன்று உருவாக உதவவேண்டும். இலங்கையில் தற்போதைய பயங்கரமான மனித உயிர் அழிவுகளை நிறுத்துவதற்கு உதவவேண்டும். புலிகளின் பாசிசப் படுகொலைகளை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.