உலகில் உயிர்வாழும் வயதான நபராக எதியோப்பிய விவசாயி
எதியோப்பியாவைச் சேர்ந்த விவசாயியொருவர் தனது வயது 160 எனவும், தானே உலகின் மிகவும் வயதானவர் எனவும் உரிமை கோரியுள்ளார்.
1895 ஆம் ஆண்டு எதியோப்பியாவில் இத்தாலி தலையீடு செய்தமை தொடர்பில் தனக்கு ஞாபகத்தில் உள்ளதாக ஓய்வுபெற்ற விவசாயியான எடகபோ எப்பா தெரிவித்துள்ளார்.
எனினும் அவரிடம் தனது வயதை உறுதிப்படுத்துவதற்கு எந்தவொரு ஆவணமும் இருக்கவில்லை.
அவர் ஒரோமியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது, 19 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற சம்பவங்களை விபரித்துள்ளார். இத்தாலியால் எதியோப்பியா ஆக்கிரமிக்கப்பட்ட போது, தான் இரு மனைவிகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாக அவர் கூறியுள்ளார்.
அவர் கூறுவது உண்மையானால் உலக வரலாற்றுப் பதிவில் நீண்ட காலம் வாழ்ந்த நபராக அவர் இடம்பிடிப்பார், இதவரை உலக வரலாற்றில் அதிக காலம் உயிர் வாழ்ந்த நபராக பிரெஞ்சு பெண்மணியான ஜீன் கல்மென்ட் உள்ளார். அவர் 1997 ஆம் ஆண்டு தனது 122 ஆவது வயதில் மரணமானார்.
எழுதப் படிக்கத் தெரியாத சமூகத்தை சேர்ந்த எப்பாவின் வயதை உறுதிப்படுத்தக் கூடிய எவருமே உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது வயது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அவர் உலகில் உயிர்வாழும் அதிவயதானவராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிப்பார். தற்போது உலகில் உயிர் வாழும் அதிக வயதானவராக 115 வயதான மிஸவோ ஒகவா விளங்குகிறார்.
Average Rating