10 நவீன ஆயுத ஹட்லொக்’ புத்தகங்களை எடுத்து வந்த தமிழ்ச்செல்வன் குழு
சிறீலங்கா அரச தரப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒஸ்லோ செல்வதாகக் கூறி நோர்வே நாட்டுக்குச் சென்று பின்னர் அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தாமலே சிறீலங்காவுக்கு கடந்த 14 ஆம் திகதி திரும்பி வந்த விடுதலைப் புலிகள் அமைப்பினர் பிரநிதிகளால் எடுத்து வரப்பட்ட நவீன யுத்த ஆயுதங்களின் விபரங்கள் அடங்கிய 10 கட்லொக் புத்தகங்களையும் 2 அதிசக்தி வாய்ந்த தொலைநோக்கி உபகரணங்களையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மேற்படி புலிகள் இயக்கத்தினரிடமிருந்து சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் அந்த நவீன தொழில்நுட்பத்தில் அமைந்த இரண்டு “வீடியோ” படப்பிடிப்புக் கருவிகளையும் புலிகள் இயக்கப் பிரதிநிதிகள் எடுத்து வந்த போதும் அவற்றிற்கான சுங்க வரியைச் செலுத்தி அவற்றைப் புலிகள் அமைப்பினர் எடுத்துச் செல்வதற்கு சுங்க அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.
“வீடியோ” படப்பிடிப்புக்கருவி மற்றும் பொருட்கள் புலிகள் இயக்கப் பிரதிநிதிகள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருப்பது பற்றியும் மற்றும் மேற்படி யுத்த ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய 10 கட்லொக் புத்தகங்கள் அதிநவீன தொலைநோக்கி கருவிகள் ஆகியன சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பற்றியும் பிரதி சுங்கப் பணிப்பாளர் வீ.எஸ்.சுபசிங்கவிடம் விசாரிக்கப்பட்ட போது அவர் தெரிவிக்கையில் மேற்படி பொருட்களை விடுதலைப் புலிகள் இயக்கப் பிரதிநிதிகள் எடுத்து வந்தது பற்றிப் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்ததாகவும் மேற்படி குறிப்பிட்ட பொருட்கள் மட்டும் புலிகள் அமைப்பினர் எடுத்துச் செல்ல அனுமதிக்கும்படி பாதுகாப்பு அமைச்சு கட்டளையிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் பேச்சுவார்த்தைக்காக வெளிநாடு சென்று திரும்பியபோது விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்கப்பட்டிருந்த சலுகைகள் எவையும் இம்முறை நோர்வே சென்று திரும்பிய புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவில்லை