கூட்டமைப்பின் கூட்டத்திற்கு சென்ற மக்கள் மீது இராணுவம் தாக்குதல்
யாழ். தெல்லிப்பளை பிரதேசத்தில் உள்ள கொல்லங்கலட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு சென்ற பொதுமக்கள் மீது இராணுவம் தடிகள், பொல்லுகளால் அடித்து விரட்டியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று மாலை 5 மணிக்கு கொல்லங்கலட்டி பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி சபை மண்டபத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக அப்பகுதியிலுள்ள மக்கள் குறித்த மண்டபத்தில் ஒன்றுகூடியிருந்தனர். இதன் போது அவ்விடத்திற்கு தடிகள், பொல்லுகளுடன் வந்த இராணுவத்தினர், கூடியிருந்தவர் மீது தடிகள் பொல்லுகளால் சரமாரியாக தாக்கிவிட்டு அவர்களை விரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தினரின் இந்த காட்டுமிராண்டித் தனத்தால் தாம் ஏற்பாடுசெய்த தேர்தல் கூட்டத்தை நடத்த முடியாது போயுள்ளதாக கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக பவ்ரல் அமைப்பினருக்கு தெரியப்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அமைப்பினர் சம்பவம் தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating