நைஜீரியாவில் ஆயுதக் குழுவின் தாக்குதலில் 87 பொதுமக்கள் உயிரிழப்பு
நைஜீரியாவின் வடகிழக்கு பிராந்தியமான போர்னோவில் போஹோ ஹரம் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 87 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பெனஸிக் நகரின் வெளிப்பகுதியில் போலி சோதனைச் சாவடிகளை உருவாக்கி இராணுவ உடை அணிந்த ஆயுததாரிகளே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை தாக்குதலில் போகோ ஹரம் குழுவினரால் பல எண்ணிக்கையிலான வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டங்களை அமுல்படுத்தக் கோரி 2009 இலிருந்து போராடி வரும் போகோ ஹரம் குழுவினர் மோசமான தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மே மாதம் போர்னா மற்றும் இரு அயல்பிராந்தியங்களும் அவசரகால நிலைமை அந்நாட்டு ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிராந்தியங்களுக்கிடையிலான தொடர்புகள் ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றன.
வன்முறைகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வரும் இராணுவக் குவிப்புகளைத் தொடர்ந்து அண்மைக்காலமாக தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகின்றது.
தாக்குதல்கள் இடம்பெற்ற பகுதிகளை போர்னா பிராந்திய ஆளுநர் கஸ்ஹிம் ஸிரிமா சென்று பார்வையிட்டுள்ளதுடன், இதுவொரு முரட்டுத்தனமானதும் இஸ்லாம் மதத்திற்கு எதிரான செயலெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறும் அறிவித்துள்ளார்.
நகரினுள் சுமார் 20 பிக்கப் வாகனங்களில் வந்த போகோ ஹரம் குழுவினரே இத்தாக்குதல்களை மேற்கொண்டதாக ஏஎப்பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் போகோ ஹரம் குழுவின் தலைநகர் அபுபக்கர் சைஹவு கொல்லப்பட்டதாக நைஜீரிய இராணுவம் கூறியுள்ள போதிலும், போஹோ ஹரம் குழுவினர் இதனை உறுதிப்படுத்தாததுடன் மேலும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating