பாகிஸ்தானில் 4 சகோதரிகள் தற்கொலை!
பாகிஸ்தானில் 4 சகோதரிகள் தற்கொலை: வரதட்சணை கொடுக்க வழியில்லாததால் உயிரை மாய்த்தனர்
‘ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்’ என்று சொல்வார்கள். உண்மையில் இது ஐந்து விஷயங்களைப் பற்றியது என்றாலும், ஐந்து பெண் பிள்ளைகளை பெற்றவன் ஆண்டி ஆவான் என்று பேசுவது வழக்கமாக உள்ளது. இது சில நேரங்களில் உண்மையாகவும் ஆகிவிடுகிறது.
ஐந்து பெண்களை பெற்ற தந்தை, அவர்களை திருமணம் செய்து கொடுக்க படும் சிரமங்கள் அதிகம். அதுவும் ஏழையாக பிறந்து விட்டால் கேட்கவே வேண்டாம். ஏழையாகப் பிறந்த அந்தப் பெண்களின் மனத்துயரங்களையும் சொல்லி மாளாது.
அந்த வகையில், வரதட்சணை கொடுக்க தந்தைக்கு வழியில்லாமல் போனதால், முதிர்கன்னியாக கண்ணீர் வடித்த சகோதரிகள் கால்வாயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் நடந்துள்ளது.
பஞ்சாப் மாகாணத்தின் மெயில்சி நகரில் வசித்து வருபவர் பஷிர் அகமது ராஜ்புத். ஏழை விவசாயியான இவருக்கு 5 பெண் பிள்ளைகள். போதிய வருமானம் இல்லாததால், சீர்வரிசை, வரதட்சணை கொடுத்து மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை.
காலம் கடந்து முதிர்கன்னிகளாக மாறிவிட்ட அந்த பெண்களில் மூத்தவருக்கு வயது 45. அடுத்து 43, 38, 35 மற்றும் 31 வயதுடையவர்கள்.
இந்நிலையில், சகோதரிகள் 5 பேரும் தங்களின் திருமணம் தொடர்பாக தந்தையிடம் பேசினர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த 5 பேரும் கால்வாயில் விழுந்தனர். இதில் 4 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். கடைசி பெண்ணான பாத்திமாவை போலீசார் உயிருடன் மீட்டனர்.
Average Rating