கிணற்றில் 15 நாட்களாக சிக்கியிருந்த சீனப் பெண் உயிருடன் மீட்பு
கிணறொன்றில் விழுந்த பெண்ணொருவர் 15 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
ஸு கிஸியு (38 வயது) என்ற மேற்படி பெண் ஹெனான் மகாணத்திலுள்ள ஸொங்பெங் கிராமத்திலுள்ள 12 அடி ஆழமான கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்துள்ளார்.
அவர் சோளத்தை உண்டும், மழை நீரை அருந்தியும் உயிர் பிழைத்திருந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை மாலை அவர் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளார்.
அந்தக் கிணறு உயரமாக வளர்ந்த சோளச் செடிகளால் மூடப்பட்டிருந்ததுடன், கிணற்றின் உட்புறச் சுவர் ஏற முடியாது வழுவழுப்பாக இருந்துள்ளது.
அந்தப் பெண் கிணற்றுக்குள் விழுந்தபோது சோளச் செடிகளைப் பற்றி தொங்கியுள்ளார்.
ஆனால், அவரது பாரத்தை தாங்காத சோள செடிகள் வேருடன் அறுந்து வந்ததையடுத்து, அவர் வரண்ட கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
இந்நிலையில் அவரது கணவர் லி குன்மிங்கும் உறவினர்களும் ஸு கிஸியுவை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனினும், அவர்களால் அவரைக் கண்டுபிடிக்க முடியாது போனது.
கடந்த 16ஆம் திகதி சோள அறுவடைக்கு சென்ற விவசாயி ஒருவர் கிணற்றிலிருந்து கூச்சலிடுவதைக் கேட்டு மீட்புப் பணியாளர்களுக்கு அது தொடர்பில் அறிவித்தார்.
இதனையடுத்து மீட்கப்பட்ட ஸு கிஸியு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது நிறை கடந்த 15 நாட்களில் 16 இறாத்தலால் குறைந்துள்ளது.
Average Rating