சிட்னி விமானத்தில் ‘8 இன்ச்’ விஷப்பாம்பு: தரையிறக்கப்பட்ட 370 பயணிகள்
சிட்னி விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றில் விஷ பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டோக்யோவிற்கு செல்ல தயாராயிருந்தது குவாண்டாஸ் விமானம் ஒன்று. விமானத்தில் பயணிகள் 370 பேர் இருந்தனர்.
விமானம் புறப்பட ஆயத்தமான போது, பயணிகள் பகுதியில் சுமார் 8 இன்ச் நீளமுடைய பாம்பு இருந்ததை பார்த்து பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த ஊழியர்கள் உடனடியாக, அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த பயணிகள் அனைவரையும் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக கீழிறக்கி, பயணிகள் விடுதியில் தங்க வைத்தனர்.
பின்னர், வேறு ஏதேனும் பாம்பு உள்ளதா என அந்த விமானம் முழுவதுமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், வேறு பாம்பு எதுவும் சிக்கவில்லை.
பிடிபட்ட பாம்பு மாண்டரின் ராட் வகையைச் சேர்ந்தது என்பதும், நேற்று முந்தினம் சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்டது என்பதும் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆனால், அந்தப் பாம்பு பயணிகள் அமரும் பகுதிக்கு வந்தது எப்படி என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப் படவில்லை.
ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம், போர்ட் மொரேஸ்பிக்கு வந்து சேர்ந்த குவான்டாஸ் விமானத்தின் இறக்கையில் 3 மீட்டர் நீளமுடைய மலை பாம்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating