வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு
வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்று (23) மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவு செய்யபட்ட 28 உறுப்பினர்களும் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திரு.சி.வி.விக்னேஸ்வரனை வட மாகாண முதலமைச்சராக ஏகமனதாக தெரிவு செய்தார்கள்.
கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், சிவசக்தி ஆனந்தன், வி.நோகராலிங்கம் ஆகியோர் உரையாற்றினார்கள்.
25 வருடங்களின் பின் இடம்பெற்ற வட மாகாண சபையில் தமிழரசுக் கட்சி 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் 132,255 விருப்பு வாக்குகளை பெற்றார்.
வடக்கு கிழக்கு தேர்தல் வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற பெருமையும் தமிழரசுக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரனையே சாரும்.
Average Rating