புத்தளத்தில் மீட்கப்பட்ட வாக்குச் சீட்டு மூடைகளை நீதமன்றத்தின் பாதுகாப்பில் வைக்குமாறு உத்தரவு!
புத்தளம் சென்ட் அன்ட்ரூஸ் மத்திய கல்லூரியில் நேற்று முன்தினம் மூன்று மூடைகளில் கண்டெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளை நீதிமன்றத்தின் நேரடிப் பாதுகாப்பில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
அத்துடன் இது தொடர்பில் பூரணமான அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது.
புத்தளம் சென்ட் அன்ட்ரூஸ் மத்திய கல்லூரியில் மீட்கப்பட்ட அனைத்து வாக்குச் சீட்டுகளும் நேற்று புத்தளம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க முன்னிலைக்கு கொண்டு வரப்பட்ட போதே இவ்வாறு அவர் உத்தரவிட்டதுடன் இது தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் மாதம் 9 ஆம் திகதி இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.
தேர்தல் வாக்கெடுப்பு நிலையமாக செயற்பட்ட இக்கல்லூரியின் ஒரு பகுதியில் புத்தளம் நகரப் பகுதியின் 46,50 வட்டாரங்களுக்கு உரியதான ஆயிரக் கணக்கான வாக்குச் சீட்டுகள் மூடைகளில் கட்டப்பட்ட நிலையில் அதே பாடசாலையின் பிறிதொரு பகுதியில் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன.
இந்த வாக்குச் சீட்டுகளில் பெரும்பாலானவை இரண்டாகக் கிழிக்கப்பட்டதாகவும் காணப்பட்டன. பெருமளவு வாக்குச்சீட்டுக்கள் மாணவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது.
இந்த விடயத்தை அறிந்த தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய நேரடியாகச் சென்று நிலைமைகளை அறிந்ததுடன் தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
இதேவேளை, வடமேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மீண்டும் புத்தளம் மாவட்டத்திலிருந்து மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவருமான அசோக வடிகமங்காவ கருத்து தெரிவிக்கும்போது புத்தளம் மாவட்டத் தேர்தலை இரத்து செய்துவிட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.
இது இவ்வதாறிருக்க புத்தளம் மாவட்ட தேர்தலை இரத்துச் செய்து விட்டு புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரி நேற்று அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றது.
Average Rating