அவுஸ்திரேலிய பாராளுமன்றில் புலிகள்மீது கண்டனம்
அவுஸ்திரேலிய சமஷ்டி பாராளுமன்றத்தில் நேற்று தொழிற்கட்சியைச் சேர்ந்த கன்பெரா செனட்டர் ஸ்டீவ் ஹச்சின்ஸ் உரையாற்றும்போது, உள்நாட்டு சட்டத்தின்கீழ் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். சர்வதேச சட்டத்தின்கீழ் புலிகள் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் உள்நாட்டு சட்டத்தின்கீழ் அவ்வமைப்பு தடைசெய்யப்படவில்லை. புலிகளைத் தடைசெய்ய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வட அமெரிக்கா ஆகிய நாடுகளின் செயற்பாடுகளை பின்பற்ற வேண்டும். இந்நடவடிக்கையானது, அவுஸ்திரேலியாவில் புலி பயங்கரவாத முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை பொலீசாருக்கு வழங்கக் கூடியதாகவிருக்கும். விடுதலைப் போராட்ட இயக்கமாக நடவடிக்கைகளை ஆரம்பித்த புலிகள் தற்போது காடைத்தனங்களில் ஈடுபட்டு வருவதால் அது சகல தரப்பாலும் கண்டிக்கப்பட வேண்டும்.
கெப்பிட்டிகொல்லாவை கிளைமோர் தாக்குதலில் 15சிறுவர்கள் உட்பட 65பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய செயற்பாடுகள் சமாதான நடைமுறைகளில் ஈடுபடும் குழுவொன்றின் செயற்பாடாக இருக்க முடியாது. பிரச்சினைக்கு பேச்சுக்களின் மூலம் தீர்வுகாண்பதில் அக்கறையில்லாத படுகொலையாளிகளின் செயற்பாடாகவே இதனைக் கருதமுடியும். என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.