உயிருடன் இருக்கும் அமைச்சர், எம்.எல்.ஏவுக்கு இறப்புச் சான்றிதழ்!!
மதுரை மாநகராட்சி சார்பில் தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் திகதி இறந்து விட்டதாக கடந்த மாதம் 23ம் திகதி இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (மார்க்சிஸ்ட்) அண்ணாதுரை 2006 ஆம் ஆண்டு இறந்து விட்டதாக கடந்த மாதம் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களது சொந்த முகவரிக்கு தனித் தனியாக மாநகராட்சியில் வழங்கியதைப் போலவே, அரசாங்க சீல் வைக்கப்பட்டு, மாநகராட்சியில் இருந்தே இறப்பு சான்றிழ்கள் அனுப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ., அண்ணாதுரை மதுரை பொலிஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம் புகார் கொடுத்துள்ளார். தனக்கு இறப்புச் சான்றிதழ் அனுப்பிய மதுரை மாநகராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
தனக்கு வந்ததைப்போலவே அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜுவுக்கும் வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்டு, சைபர் கிரைம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தனை விசாரிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளார் மதுரை பொலிஸ் கமிஷனர்.
இந்த விடயம் குறித்து அறிந்த மதுரை மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா அதிர்ச்சி அடைந்ததுடன், மாநகராட்சி கமிஷனர் நந்தகோபலை அழைத்து விசாரித்துள்ளார்.
அவரோ, தான் விடுமுறையில் சென்ற காலத்தில் தனது பொறுப்பில் உள்ளவர்களிடம் யாரோ ஏமாற்றி இந்த சான்றிதழ்களை வாங்கிச் சென்றதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக மதுரை மாநகராட்சி சார்பில் அளிக்கபட்டுள்ள புகாரில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் கணினி பிரிவில் டிஜிட்டல் கையெழுத்தினை தவறாக பயன்படுத்தி போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating