சுரேஸ் பிறேமச்சந்திரன், தனது கட்சி உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வைப் புறக்கணிப்பு!
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் (ஈபிஆர்எல்எப்) சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற போது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கலந்துகொள்ளவில்லை.
அமைச்சு நியமனம் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து 9 உறுப்பினர்கள் கடந்த 11 ஆம் திகதி யாழில் இடம்பெற்ற பதவிப்பிரமாண நிகழ்வை புறக்கணித்திருந்தனர். இவர்களில் கடந்த திங்கட்கிழமை 5 பேர் பதவிப்பிரமாணம் செய்த நிலையில் ஈபிஆர்எல்எப் கட்சி சார்பாக போட்டியிட்ட 4 பேர் பதவிப்பிரமாணம் செய்யாமல் இருந்தனர்.
இவர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், வடமாகாண உறுப்பினர்கள் மூன்று பேர் இன்று புதன்கிழமை வவுனியாவில், சட்டத்தரணி கே.தயாபரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
வவுனியா மாவட்ட உறுப்பினர் மயில்வாகனம் தியாகராஜா, முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், யாழ்மாவட்ட உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோரே சத்தியப்பிரமாணம் மேற்கொண்டனர்.
ஈ.பி.ஆர்.எல்.எப் இன் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழில் இருந்து சர்வேஸ்வரனுடன் வந்து வவுனியாவில் தங்கியிருந்த போதும், வவுனியாவில் நடைபெற்ற தனது கட்சி அங்கத்தவர்களின் சத்தியப் பிரமாண நிகழ்விற்குச் செல்லவில்லை.
இருந்தும் இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வட மாகாணசபைக்கு இதே கட்சியின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட வவுனியாவை சேர்ந்த இ.இந்திரராஜா இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவில்லை.
“தான் வட மாகாண முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதற்கு தீர்மானித்துள்ளமையினால் இன்றைய சத்தியப் பிரமாண நிகழ்வை புறக்கணித்ததாக” அவர் மேலும் தெரிவித்தார்.
Average Rating