விளக்கை சேவல் தட்டிவிட்டதால் மாணவி தீப்பற்றி மரணம்!!
16 வயது மாணவி இரவில் குப்பிலாம்பு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது சேவல் பறந்து வந்து குப்பிலாம்பைத் தட்டிவிட்டதால் உடையில் தீப்பிடித்து அந்த மாணவி உயிரிழந்துள்ளார்.
பதுளை அலகொல்ல வித்தியாலயத் தில் 10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவியே
இவ்வாறு உயிரிழந்தவராவார். ‘மகள் மீது தீப்பிடித்ததும் தான் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டேன் மயக்கம் தெளிந்தவுடன் வைத்தியசாலைக்குச் சென்றேன். அங்கு என்ன நடந்ததென எனது மகளிடம் கேட்டேன்.
பாடம் படித்துக்கொண்டிருக்கும் போது வீட்டில் வளர்க்கும் சேவல் பறந்துவந்து குப்பிலாம்பை தட்டிவிட்டது என்றாள்’ காலஞ்சென்ற மாணவியின் தாய் மரண விசாரணையில் சாட்சியளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஊவா பரணகம பொலிஸ் நிலைய சார்ஜன்ட் குணபால சாட்சியங்களை நெறிப்படுத்தினார்.
அவர் தொடர்ந்து சாட்சியளிக்கையில் கூறியதாவது, எனது கணவர் 9 வருடங்ளுக்கு முன்னர் இறந்துவிட்டார். எனக்கு நான்கு பிள்ளைகள். காலஞ்சென்றவர் எனது கடைசிப் பிள்ளை. எனது புதல்வர்கள் மூவரும் கொழும்பில் கூலி வேலை செய்கின்றனர். அவர்கள் தங்கையின் கல்விச் செலவுக்கு பணம் அனுப்புவர்.
சம்பவ தினம் தான் வீட்டுக்கு சிறிது தூரத்திலுள்ள சமையலறையில் இரவு உணவு தயாரித்துக் கொண்டிருந்தேன். மகள் வீட்டில் குப்பிலாம்பு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தார்.
திடீரென மகளின் கூக்குரல் சத்தம் கேட்டதும் நான் ஓடி வந்து பார்த்த போது மகளின் உடம்பிலுள்ள உடைகள் எரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து நான் மயக்கமடைந்து விட்டேன்.
அடுத்த வீட்டில் வசிக்கும் எனது கணவரின் சகோதரர் மகளை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார் அங்கிருந்து அவர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு உயிரிழந்தார் எனத் தெரிவித்துள்ளார். மரணவிசாரணை அதிகாரி விபத்து மரணமெனத் தீர்ப்பளித்துள்ளார்.
Average Rating