ஆபிரிக்க நாடுகளால், பொதுநலவாய மாநாடு புறக்கணிப்பு
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டினை பகிஷ்கரிக்கும் முயற்சியில் ஆபிரிக்க நாடுகள் இணைந்து செயற்படுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உகண்டா, தன்சானியா, ருவண்டா, நைஜீரியா, தென்னாபிரிக்கா, சம்பியா, கென்யா ஆகிய ஆபிரிக்க நாடுகளே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன என்றும் அந்த ஊடகம் தெரிவித்துளது.
இலங்கையுடன் தொடர்புபடாத சில பிரச்சினைகளுக்காகவே இந்த நாடுகள் பொதுநலவாய மாநாட்டைப் பகிஷ்கரிக்கவுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
கென்ய ஜனாதிபதி மற்றும் உப ஜனாதிபதி ஆகியோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பொதுநலவாய மாநாட்டினைக் கென்யா பகிஷ்கரிக்கவுள்ளது.
கென்யாவின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையிலேயே ஏனைய ஆபிரிக்க நாடுகளும் பொதுநலவாய மாநாட்டினை பகிஷ்கரிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உச்சிமாநாட்டை பகிஷ்கரிக்க கென்யா பிரசாரம் செய்யவில்லை என கென்யா மறுப்பு தெரிவித்துள்ளது.
எனினும் நைரோபியின் உள்ளூர் பத்திரிகையான ‘ஸ்டார்’ கொழும்பு உச்சி மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டுமென்று பல ஆபிரிக்க நாடுகள் மத்தியில் கென்யா பிரசாரம் செய்து வருவதாக செய்தியொன்று வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating