18 வயதுக்கு குறைந்த யுவதிகளில் 16 வீதமானோர் கருக்கலைப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 வயதிற்கு குறைந்த யுவதிகள் கருத்தரிப்பு வீதம் 16 வீதமாக உள்ள நிலையில் இது தேசிய மட்டத்தில் 6. 5 வீதமாகவே காணப்படுகின்றது.
இதற்கு காரணம் இனவிருத்தி சுகாதார அறிவு இளம் யுவதிகளிடம் இன்மையே என இலங்கை குடும்ப திட்டமிடல் சங்க திட்ட முகாமையாளர் கே. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களிடையே ‘வீழ்வதும் மீள்வதும்’ எனும் தலைப்பில் சுகாதார ரீதியான அறிவையும் மற்றும் மாணவர்களை சீரழிக்கும் காரணிகளையும் வெளிப்படுத்தும் மேடைநாடகம் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2013) மகாஜனக் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவிக்கையில்; மாவட்டத்திலுள்ள சகல பாட சாலைகளிலும் இது போன்ற விழிப் புணர்வை ஏற்படுத்தும் மேடை நாடகங்களை அரங்கேற்ற எண்ணியுள்ளதாக தெரிவித்தார்.
இதில் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் இலத்திரனியல் உபகரணங்கள், இணையத் தளங்கள், பேஸ்புக்குகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்காமல் ஏற்படும் விளைவுகளின் தாக்கங்கள் மேடை நாடகத்தில் சுட்டிக்காட்டப்பட்டன.
மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, பாடசாலை அதிபர் எஸ். மகாலிங்கம் மற்றும் உப அதிபர் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.
Average Rating