தண்டவாளத்தை உடைத்து நாசவேலை 511 பயணிகளுடன் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது
பீகார் மாநிலம் கயா மாவட்டம் முக்தும்பூர்-பெலா ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் 3 அடிக்கும் அதிகமாக ரெயில் தண்டவாளத்தை மாவோ தீவிரவாதிகள் உடைத்து எடுத்துச் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் அந்த வழியாக சாரநாத்-ராஜ்கீர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. தண்டவாளம் துண்டித்து எடுக்கப்பட்டு இருந்தது ரெயில் டிரைவருக்கு தெரியாது. ரெயில்என்ஜின் துண்டிக்கப்பட்ட தண்டவாளத்தை கடந்து விட்டது. என்ஜினுக்கு அடுத்த பெட்டி அந்த இடத்தை கடந்த போது நகரமுடியாமல் நின்று விட்டது. ரெயில் திடீரென நின்று விட்டதால் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று உணர்ந்த டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தி விட்டார். தக்க சமயத்தில் சாதுர்யமாக டிரைவர் நடந்ததால் ரெயில் கவிழாமல் தப்பியது. ரெயிலில் பயணம் செய்த 511 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடம் சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது தண்டவாளம் துண்டிக்கப்பட்ட இடத்தில் ஒரு நாட்டு கைத்துப்பாக்கியும், தண்டவாளத்தை அறுக்கப் பயன்படுத்திய சிறிய ரக ரம்பம் ஒன்றையும் கைப்பற்றினார்கள்.
ரெயில்வே என்ஜினீயர்கள் உடனடியாக துண்டிக்கப்பட்ட இடத்தில் தண்டவாளத்தை சரி செய்தனர். பின்னர் வழக்கம் போல் ரெயில் புறப்பட்டு சென்றது.