வாவிக்கருகே காதல் ஜோடி கலாட்டா; காதலன் மீது கல்லெறிந்த இளைஞர்கள்
பொரலஸ்கமுவ வாவிக்கருகே இளம் காதல் ஜோடியொன்று வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த மூவர் காதலனை கற்களால் தாக்கியதால் தலையில் பலத்த காயங்களுடன் காதலன் கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கற்களை எறிந்த மூன்று நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். வாவிக்கருகே நேற்று முன்தினம் மாலை உரையாடிக் கொண்டிருந்த காதலர்களுக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதை அடுத்து இளைஞன், யுவதியை கன்னத்தில் அறைந்துள்ளான்.
இதைப் பார்த்த வாவிக்கருகேயிருந்த சந்தேகநபர்கள் மூவரும் இளைஞனைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மூவரின் தாக்குதலைத் தாங்க முடியாத காதலன் தன்னை தாக்க வேண்டாமென காலில் விழுந்து கெஞ்சியும் சந்தேகநபர்கள் இளைஞன் மீது மிருகத்தனமாக காதலியின் எதிரில் தாக்குதல் நடத்தியதாக காதலி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்களிடமிருந்து தப்புவதற்காக இந்த இளைஞன் மஹரகம பக்கமாக ஓடிய போது சைக்கிளில் துரத்தி வந்த இந்த நபர்கள் கல்லை இளைஞனின் தலையை நோக்கி எறிந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மொனராகல, மஹியங்கன மற்றும் காலி பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர். மஹரகம பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating