‘நடிகை ஜியா கானுக்கு நெருக்கமான ஒருவரே அவரை கொலை செய்தார்..
பொலிவூட் நடிகை ஜியா கான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும் ஜியா கானுக்கு நெருக்கமான ஒருவரே அவரை கொலை செய்தார் எனவும் ஜியா கானின் தயார் ரபியா கான் இன்று சனிக்கிழமை வாக்குமூலம் அளித்துள்ளார்.
மும்பை ஜூ{ஹ நகர பொலிஸ் நிலையத்தில் அளித்த வாக்குமூலத்திலேயே இவ்வாறு ரபியா கான் தெரிவித்துள்ளார்.
ஜியா கானின் மரணம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கு மும்பை மேல் நீதிமன்றம் 3 தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து ரபியா கானின் வாக்குமூலத்தை ஜூ{ஹ பொலிஸார் இன்று பதிவு செய்தனர்.
‘இன்று காலை பொலிஸ் நிலையத்துக்கு வந்து ரபியா கான் வாக்குமூலம் அளித்தார். அவர் உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்டார். பல தடவைகள் அவரின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது’ என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
26 வயதான நடிகை ஜியா கான் ஜூன் 03 ஆம் திகதி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டபோதிலும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரின் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்திருந்தனர்.
இம்மரணம் தொடர்பாக ஜியா கானின் காதலரான சூரஜ் பஞ்சோலி சந்தேகத்தின் பேரில் ஜூன் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஜூலை 2 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating