“மணமகள் தேவை” விளம்பர மோசடி: கேகாலை நபரிடம் சிக்கிய ஆசிரியை!
மணமகள் தேவையென்று பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்து ஆசிரியை ஒருவரிடமிருந்து மூன்று இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் நபரை பிபிலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கேகாலையைச் சேர்ந்த நபர் ஒருவரே பிபிலை பகுதியைச் சேர்ந்த ஒரு ஆசிரியையிடம் பண மோசடி செய்து இவ்வாறு மாட்டிக் கொண்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஐம்பத்தொரு வயதுடைய மேற்படி நபர் தான் திருமணம் செய்ய எண்ணியிருப்பதனால் தனக்கு மணமகளொருவர் தேவையென்றும் விரும்புபவர்கள் தன்னுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் சிங்கள மொழி மூலமான பத்திரிகையொன்றில் விளம்பரம் செய்திருந்தார்.
இதற்கிணங்க பிபிலைப் பகுதியின் அரச பாடசாலையொன்றின் ஆசிரியையொருவர் விளம்பரத்தில் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பேசிய போது திருமணம் செய்து கொள்ள சம்மதித்த நபர் ஆசிரியையை நேரில் சந்தித்து மனம் விட்டு கதைக்க வேண்டுமென்ற விருப்பத்தை வெளியிட்டுள்ளார். ஆசிரியையும் அவ்விருப்பத்தையேற்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்புகள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்துள்ளன. இவ்வேளையிலேயே அந்நபர் அவ் ஆசிரியையிடம் தனக்கு வாகனமொன்று எடுக்க வேண்டுமென்றும் அதற்கு மூன்றரை இலட்சம் ரூபா பணம் பற்றாக்குறையாக இருப்பதாகவும் கூறியதையடுத்து அவ் ஆசிரியை இரு தடவைகளில் மூன்றரை இலட்சம் ரூபா பணத்தை அந்நபரிடம் வழங்கியுள்ளார்.
பணம் வழங்கப்பட்ட தினம் முதல் அந்நபர் தன்னுடன் கதைப்பதை நிறுத்திக் கொண்டு தலை மறைவாகியுள்ளதாக பிபிலைப் பொலிஸாரிடம் அவ் ஆசிரியை முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட துரித நடவடிக்கையினை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது பெண்களை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல பெண்களிடம் பண மோசடி செய்திருப்பதும் இம் மோசடிகள் குறித்து இந்நபருக்கெதிராக கேகா லை நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
Average Rating