ஆளுனருடைய உரையை புறக்கணித்தோம் -சிவாஜிலிங்கம்
வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு தவிசாளர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில், யாழ். கைதடியிலுள்ள வட மாகாண சபை கட்டிடத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது.
இதன்போது ஆளுநரின் சம்பிரதாயபூர்வ உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
அமர்வின் சம்பிரதாயபூர்வ உரையை வட மாகாண ஆளுநர் நிகழ்த்துவதற்கான அறிவிப்பை, சபையின் தவிசாளர் விடுத்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், சுகிர்தன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு தேவை என்ற கருத்தை வலியுறுத்தி ஆளுனருடைய உரையை புறக்கணிக்க தீர்மானித்ததாக கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.
”போரினால் பாதிக்கப்பட்டவர்களும் அரசியல் கைதிகளும் காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களும் ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலே, காணிகள் கபளிகரம் செய்யப்பட்டு அதைவிட இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு தேவை என்ற கருத்தை வலியுறுத்தி ஆளுனருடைய உரையை புறக்கணிப்பது என நாங்கள் தீர்மானித்துள்ளோம்”.எனவும் அவர் கூறினார்.
”இராணுவ அதிகாரி ஆளுநனராக இருக்கிறார் என முதலமைச்சர் முதலாவது அமர்விலேயே குறிப்பிட்டிருந்தார். இவர் இருப்பது எமக்கு உடன்பாடு இல்லை என்ற பிற்பாடும் இவரருடைய உரையை கேட்பதை நான் தவிர்த்துக்கொள்கிறேன்” என அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
பெரும்பான்மை வெற்றியை கூட்டமைப்பு பெற்றபோதிலும், ஆளுனரை மாற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என சந்திரலிஙகம் சுகிர்தன் கூறியுள்ளார்.
”தேர்தல் பிரசார கூட்டங்களில் இருந்தே தெரிவித்து வருகின்றோம். இவர் ஆளுனராக எமது மாகாணத்தில் இருக்கக்கூடாது என கூறி அரசாங்கத்திடம் கேட்டு வந்துள்ளோம். அந்த அடிப்படையில் நாங்கள் பெரும்பான்மையான வெற்றியை பெற்றுக்கூட அவரை மாற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை”. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating