அபுதாபியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கங்காதரனுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம்
ஐக்கிய அரபு குடியரசின் தலைநகர் அபுதாபியில் உள்ள அல் ரபி பள்ளியில் கடந்த 32 வருடங்களாக வேலை பார்த்துக்கொண்டிருப்பவர் இ.கே. கங்காதரன். மலையாளியான இவர் அபுதாபியை சேர்ந்த ஒரு பெண்ணை கற்பழித்து விட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கற்பழிப்பு சம்பவத்தில் நான் ஈடுபடவில்லை என்று ஆரம்பம் முதல் மறுத்து வரும் கங்காதரனுக்கு, மரணதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு ஆதரவாக இந்தியா மற்றும் பிரிட்டனில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கங்காதரன் தவறுதலாக சிறையிலடைக்கப்பட்டு, அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி அவரது ஆதரவாளர்கள் லண்டன் யு.ஏ.இ. தூதரகம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், கங்காதரனுக்கு ஆதரவாக எழுதிய ஒரு புகார் மனுவையும் தூதரக அதிகாரியிடம் வழங்கினர்.
சிறையில் வாடும் அவரை பதவியிறக்கம் செய்தும், அடித்தும், கடந்த 3 நாட்களாக உணவு தண்ணீர்தர மறுத்து கொடுமைப்படுத்துவதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய அரபு குடியரசு அதிபர் ஷேக் கலிபா பின் சயெத் நயான், இளவரசர் ஷேக் முகமது பின் சயெத் பின் சூல்தான் அல் நயான் மற்றும் இந்தியா, பிரிட்டன் தூதரக அதிகரிகளுக்கும் அவர்கள் புகார்கள் அனுப்பியுள்ளனர்.
இந்தி மொழியில் விசாரணையை நடத்தி உண்மைக்கு புறம்பான விசாரணை நடத்தியதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மனிதஉரிமை ஆர்வலர்களும் இந்த விசாரணையை சுற்றி நிலவும் அமைதி குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், நேர்மையான சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும், அவர் மீதான கொடுமை குறித்து விசாரணை நடத்துவதும் அவசியம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து இந்திய தூதரக அதிகரிகள் சரியான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Average Rating