13 வயதான மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது!
13 வயதான தனது சொந்த மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் தந்தை ஒருவரைக் கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுக்கச்சி எனும் பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி அப்பிரதேச பாடசாலை ஒன்றில் 8 ஆம் வகுப்பில் கல்வி பயின்று வருகின்ற நிலையில் அவளது தாய் தொழில் பெற்று வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.
குறித்த சிறுமியும், அவளது இரு சகோதரிகளும் தமது தகப்பனின் பாதுகாப்பில் வளர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இச்சிறுமி தகப்பனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு தனது தந்தையினால் பாலியல் வல்லுறவுக்கு தொடர்ச்சியாக உள்ளாக்கப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் குறித்த சிறுமி இது தொடர்பில் தனது பாட்டியிடம் தெரிவித்ததையடுத்தே பாட்டியினால் இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த புத்தளம் பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அச்சிறுமி பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள புத்தளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு கொண்டு வருகின்றனர்.
Average Rating