மாலத்தீவின் அதிபராக அப்துல்லா யாமீன் இன்று பதவி ஏற்பு
கடந்த இரண்டு வருடங்களாக இழுபறியில் இருந்த மாலத்தீவுகளின் அதிபர் தேர்தலில் எதிர்பாராத விதமாக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மாலத்தீவுகள் முற்போக்குக் கட்சியின் வேட்பாளரான அப்துல்லா யாமீன் வெற்றி பெற்றார். 51.39 சதவிகித வாக்குகளைப் பெற்றதன்மூலம் இவர் தனக்குக் கடும் போட்டியாளராக இருந்த முன்னாள் அதிபர் நஷீதைத் தோற்கடித்தார்.
மாலத்தீவுகளின் முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளரான மாவ்மூன் அப்துல் கய்யூமின் சகோதரர் வழி வந்த அப்துல்லா யாமீன் இன்று நடைபெற்ற பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் அந்நாட்டின் ஆறாவது அதிபராகப் பதவியேற்றார். 21 குண்டுகள் முழங்க அந்நாட்டின் தலைமை நீதிபதியான அகமது ஃபைஸ் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர் ஒரு பொருளாதார நிபுணர் ஆவார். இவருடன் முகமது ஜமீல் துணை அதிபராகப் பதவியேற்றார்.
இதற்குப்பின்னர் நடத்திய தனது தொடக்க உரையில் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் மாலத்தீவுகளின் நுழைவாயில்களைப் பாதுகாக்க வேண்டும் என்று யாமீன் கூறினார். மாலத்தீவுகளைப் பாதுகாப்பான நாடாகவும், வளர்ச்சியடைந்த நாடாகவும் மாற்றப் போராடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் பிற நாடுகளுடன் சுமூகமான உறவை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாலத்தீவுகளின் முன்னாள் அதிபர்களான மாவ்மூனும், நஷீதும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களில் 50 பேர் இந்த சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் இமாத் மசூத் கூறினார்.
Average Rating