தவறுதலாக சிறிய விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜம்போ ஜெட்
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் விசிடா பகுதியில் உள்ள மெக்கொன்னல் விமானப்படைத் தளத்திற்கு நேற்று அனுப்பப்பட்ட மிகப்பெரிய சரக்கு விமானமான போயிங் 747 டிரீம்லிப்டர் தவறுதலாக அருகிலிருந்த கர்னல் ஜேம்ஸ் ஜபாரா விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஆயினும், அங்கிருந்து அந்த விமானத்தை திரும்பவும் மேலெழுப்ப முடியவில்லை.
ஜபாரா விமான நிலையத்தின் ஓடுதளம் 1,860 மீ நீளம் கொண்டது. இந்த நீளம் அந்த விமானம் மேலெழும்ப போதுமானதாக இல்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போயிங் நிறுவனம் இந்த விமானத்தை வெளியில் எடுக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இதனை வெளியில் எடுப்பதற்காக அனுப்பப்பட்ட மீட்பு இயந்திரம் பாதியில் பழுதாகி நின்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், விமானத்தை வெளியில் எடுத்துவிடமுடியும் என்று போயிங் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இத்தகைய சரக்கு விமானங்களுக்கு 2,780 மீ நீளம் கொண்ட ஓடுதளம் தேவைப்படுகின்றது.
400 இருக்கைகள் கொண்ட போயிங் நிறுவனத்தின் பயணிகள் விமானங்களே இத்தகைய சரக்கு விமானங்களாக மாற்றப்பட்டுள்ளன. எனவே, இந்த விமானங்கள் மற்ற விமானங்களைவிட அதிக சரக்குகளை ஏற்றிச்செல்லும் தன்மை உடையவையாக இருக்கும் என்று போயிங் நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்த நிறுவனத்தின் பயணிகள் விமானங்களின் கட்டுமானத்திற்குத் தேவையான பாகங்களை உலகம் முழுவதிலும் உள்ள அதன் விற்பனையாளர்களிடமிருந்து பெற்று இறுதிக் கட்டப் பணிகள் நடக்கும் வாஷிங்டன் மாநிலத்திற்கு கொண்டுசெல்ல போயிங் நிறுவனம் இதுபோன்ற நான்கு ட்ரீம்லிப்டர் விமானங்களைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
விமானம் தரையிறங்கியபோது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஜபாரா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும் அதனை எவ்வாறு அங்கிருந்து மேலேழுப்புவது என்பதுகுறித்து யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை.
Average Rating