நேபாள இடைக்கால அரசில் சேர `மாவோயிஸ்டு’கள் சம்மதம்
நேபாளத்தில் மன்னர் ஞானேந்திரா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் பணிந்தார். மீண்டும் மூத்த அரசியல் தலைவரான கொய்ராலா பிரதமராகி இருக்கிறார்.
இதற்கிடையில் 10 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடி வந்த மாவோயிஸ்டு தீவிரவாத இயக்கத்தினர் அமைதிவழிக்கு திரும்ப முன் வந்தனர். பிரதமருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தவும் முன்வந்தனர். இதனை அடுத்து நேற்று முன்தினம் தலைநகர் காட்மாண்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாவோயிஸ்டுகளின் தலைவர் பிரசாந்தா கலந்து கொண்டார். இதற்காக அவர் நேபாளத்தில் உள்ள பொக்காரா என்ற இடத்தில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் காட்மாண்டு வந்தடைந்தார்.
பிறகு பிரதமர் கொய்ராலாவும், பிரசாந்தாவும் சுமார் 2 மணி நேரம் தனியாக பேச்சு நடத்தினார்கள். அதன் பிறகு பிரதான 7 அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவது, தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு இடைக்கால அரசை ஏற்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன்படி இன்னும் ஒரு மாதகாலத்திற்குள் இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இடைக்கால அரசில் சேர மாவோயிஸ்டுகள் சம்மதம் தெரிவித்தனர்.
ஆனால் ஆயுதம் ஒப்படைப்பது பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் நேர்மையான, அமைதியாக தேர்தல் நடைபெறுமா? என்று சில தலைவர்கள் அச்சம் தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் இடைக்கால அரசியல் சட்ட வரைவு உருவாக்க நேபாள சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி லட்சுமண் அர்யால் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நேபாள வக்கீல்கள் சங்க தலைவர் சாம்பு தாபா உள்பட 5 மூத்த வக்கீல்கள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் 15 நாட்களில் பேச்சு நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.