இறுதிச்சடங்குக்காக மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த குழந்தை, விழித்தெழுந்து அழுததால் அதிர்ச்சி
இறந்ததாக அறிவிக்கப்பட்டு, இறுதிச்சடங்குக்காக மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையொன்று உயிருடன் இருப்பதை அறிந்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் அன்ஹுய் மாகாணத்திலுள்ள சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமார் ஒரு மாத வயதான ஆண் குழந்தையொன்று இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இக்குழந்தைக்கான சிகிச்சையை நிறுத்திக் கொள்வதற்கு அதன் பெற்றோர் இணங்கினர்.
இக்குழந்தை இறந்ததாக அறிவித்து மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டவுடன் இறுதிச்சடங்குக்காக மலர்ச்சாலையொன்றுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், நேற்றுமுன்தினம் அக்குழந்தை திடீரென அழுததைக் கண்டு மலர்ச்சாலை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து அக்குழந்தை மீண்டும் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் குழந்தை உயிருடன் புதைக்கப்படும் அவலம் தடுக்கப்பட்டது.
இக்குழந்தை எத்தனை நாள் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது இறுதிச்சடங்கு எப்போது நடத்தப்படவிருந்தது என்பன குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Average Rating