டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து, இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது -வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது, வடக்கு மாகாணசபையை சுதந்திரமாக செயற்பட முடியாதவாறு முட்டுக்கட்டைகள்! வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்-
வடமாகாண சபையில் நாங்கள் சுதந்திரமாக செயற்பட முடியாதவாறு ஆளுனராலும் அரசதிகாரிகளினாலும் பல்வேறு முட்டுக் கட்டைகள் போடப்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கிக் கிளையைத் திறந்து வைப்பதற்காக நேற்றையதினம் வருகை தந்திருந்த போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண நிர்வாக செயற்பாடுகளில் இராணுவ தலையீடு இருப்பதாகவும் இராணுவ ஆளுனரை மாற்றி சிவில் ஆளுனர் ஒருவரை நியமிக்குமாறும் எமது வடமாகாணசபையால் ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் பேச்சுக்கள் நடத்தியிருப்பதாகவும், அவர் ஜனாதிபதியிடம் பேசி ஒரு தீர்வு காண்பதாக உறுதியளித்திருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதேவேளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் குழு கூட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்துள்ள நிலையில், டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவராக என்னை நியமிப்பதாக ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளார்.
இருப்பினும் ஒருங்கிணப்பு குழுக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற வேண்டிய நிலையில், மகிந்த சிந்தனை என்ற அரசியல் நோக்கங்களுக்காக இந்த இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.
Average Rating