பேஸ்புக்கிலும் தமிழர்களை உளவு பார்க்கிறது பொலிஸ்..!
தமிழ் இளையவர்கள் மத்தியில் முகப்புத்தகப் பாவனை அதிகரித்துள்ள நிலையில் அதனைப் பொலிஸார் உளவு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.
முகப் புத்தகத்தில் மாவீரர் நினைவுதின படங்களை கடந்த 27ஆம் திகதி பதிவேற்றியிருந்த ஒருவரின் வீட்டைத் தேடிப் பொலிஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர்கள் தினத்தைக் கடைப்பிடிப்பதற்கு அரசு இலங்கையில் தடைவிதித்திருந்தது. எனினும் ஒரு சிலரால் மறைவாக ஆங்காங்கே வீடுகளிலும் பிரத்தியேக இடங்களிலும் மாவீரர் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டன. (இலங்கையில் முப்பது இலட்சம் தமிழர்கள் தற்போதும் வாழும் நிலையிலும், முப்பது பேர் கூட இவ்வாறு மாவீரர் தினத்தை அனுச்டிக்கவில்லை என்பது வேறு விடயம்)
இவற்றைப் பற்றிய படங்களும் பதிவுகளும் முகப் புத்தகங்களில் (பேஸ்புக்) பதிவேற்றம் செய்யப்பட்டன.
உயிரை ஈகம் செய்த, தனது சகோதரனுக்காக மாவீரர் தினத்தில் வீட்டில் குடும்பத்தினர் சுடர் ஏற்றிய ஒளிப்படத்தை, ஒருவர் தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதனை எப்படியோ உளவறிந்த பொலிஸார், அந்த முகப் புத்தகத்துக்கு உரியவரைத் தேடிச் சென்றிருக்கின்றனர். அவரது வீட்டைச் சரியாக கண்டறிய முடியாத நிலையில் அக்கம் பக்கத்தில் விசாரித்திருக்கின்றனர்.
இதனைக் கேள்விப்பட்ட குறித்த நபர் உடனடியாகத் தனது முகப்புத்தகக் கணக்கை மூடிவிட்டுத் தலைமறைவாகி விட்டார்.
தலைமறைவாவதற்கு முன்னர் “தனது குடும்ப உறுப்பினரை நினைவுகூரக்கூட தனக்கு இந்த நாட்டில் உரிமை இல்லையா?” என்று அவர் தனது நண்பர்களிடம் கவலைப்பட்டுள்ளார்.
இலங்கையில் ஊடக சுதந்திரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் சமூக வலைத்தள வெளிகளும் உளவு பார்க்கப்படுவது, மக்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் மிக மோசமான அச்சுறுத்தல் என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஊடகங்களின் சுய தணிக்கை, அடக்குமுறை என்பவற்றுக்குள் கொஞ்சமாவது சுதந்திரமான வெளியை மக்களுக்கு வழங்கி வந்த சமூக வலைத்தளங்களையும் அதிகாரிகள் உளவு பார்த்து, அதனடிப்படையில் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது கருத்துச் சுதந்திரத்தின் மீது மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.
Average Rating