“முக்குலத்தோர் புலிப்படை” அமைப்பை கலைக்க கோரி, நடிகர் கருணாஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற 30 பேர் கைது
சென்னையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை கலைக்க வலியுறுத்தி நடிகர் கருணாஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளபுரம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருப்பவர் நடிகர் கருணாஸ். இவரது வீடு சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் உள்ளது. இந்தநிலையில் நேற்று அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு தேவர் பேரவை என்ற அமைப்பினர் அறிவித்து இருந்தனர்.
இதனையடுத்து நடிகர் கருணாஸ் வீட்டின் முன்பு திருமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் கலிதீர்த்தான் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
தமிழ்நாடு தேவர் பேரவை அமைப்பினர் நடிகர் கருணாஸ் வீட்டை முற்றுகையிடுவதற்காக அவரது வீட்டை நோக்கி கோஷம் போட்டுக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
இதனையடுத்து மாநில பொருளாளர் வி.பி.தேவன் தலைமையில் திரண்டு வந்த 30 பேரையும் போலீசார் உடனே கைது செய்தனர்.
அப்போது நிருபர்களிடம் வி.பி.தேவன் கூறுகையில், “தேவர் இனத்திற்கு சம்பந்தம் இல்லாத கருணாஸ் தன் சுயலாபத்திற்காக முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை ஏற்படுத்தி பிழைப்பு நடத்துகிறார்.
எனவே அந்த அமைப்பை அவர் கலைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 2-முறை அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினோம்.
அவரது அமைப்பை கலைக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். கலைக்கா விட்டால் விரைவில் மாநில அளவில் தேவர் இனமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்” என்று கூறினார்.
கைதான அனைவரையும் போலீசார் ஒரு மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Average Rating