நீண்ட நாள் விடுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ். பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கு தகுந்த காரணங்கள் எதுவுமின்றி நீண்டகால விடுமுறை வழக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் இன்று காலை 10.30 மணியளவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த மாதம் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிற்காக அனைத்து பல்கலைகழகங்களுக்கும் 9ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை விடுமுறை விடப்பட்டு இருந்தது.
ஆனால் யாழ். பல்கலைக்கழகத்திற்கு மட்டும் டிசம்பர் 2ம் திகதி வரை விடுமுறை விடப்பட்டு இருந்தது. எதற்காக எமக்கு மட்டும் இந்த நீண்ட விடுமுறை விடப்பட்டது?
மாணவர்களுக்கு பரீட்சை நெருங்குவதாலும் பல்கலைக்கழகத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவுமே இந்த விடுமுறை என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்து இருந்தது.
அரையாண்டு பருவத்திற்குரிய அனைத்து பாடவிதானங்களும் பூர்த்தியாக்கப்பட்ட பின்னரே சில நாட்கள் பரீட்சை விடுமுறை விடப்படும். ஆனால் எந்த பாடவிதானங்களும் பூர்த்தியாக்கப்படாமலும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் எனும் காரணங்கள் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை.
உண்மையில் இந்த நீண்ட விடுமுறை எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும். இறந்து போன ஆன்மாக்களை மதிப்பது ஒரு பொது விதியாகும்.
தன் இனம் சார்ந்து யாருக்காவது அஞ்சலி செலுத்துவது அவ் இனத்தின் அடிப்படை உரிமையாகும் அந்த உரிமையை மறுப்பதை விட கேவலமான அநாகரிகமான செயல் இவ்வுலகில் வேறெதுவும் இல்லை.
இந்த நீண்ட விடுமுறையானது ஏனைய பல்கலைக்கழகத்திற்கும் விடப்பட்டு இருந்தால் ஏற்று கொள்ளக்கூடியது. ஆனால் எமக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது எம்மை அடக்குமுறைக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கும் செயலாகவே இதனை நாம் பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.
Average Rating