பெண்ணின் வயிற்றில் கையுறையை வைத்து தைத்தனுப்பிய இங்கிலாந்து டாக்டர்கள்
இங்கிலாந்தின் டெர்பிஷைர் அருகேயுள்ள விர்க்ஸ்வொர்த் பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் பிர்க்ஸ்(42). கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் இவர் சில கோளாறு காரணமாக தனது கருப்பையை அகற்றிவிட முடிவு செய்தார்.
அங்குள்ள ராயல் டெர்பி ஆஸ்பத்திரியில் கடந்த(நவம்பர்) 19ம் தேதி நடைபெற்ற 5 மணி நேர ஆபரேஷன் மூலம் ஷாரோன் பிர்க்ஸ்-ன் கருப்பை அகற்றப்பட்டது.
ஆபரேஷனுக்கு பின்னர் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த அவர் வயிற்றின் அடிப்பகுதியில் கடுமையான வலியை உணர்ந்தார்.
ஆபரேஷனுக்கு பிறகு எழுந்து சென்று சிறுநீர் கழிக்க கூடாது என்பதற்காக அவருக்கு பொருத்தப்பட்டிருந்த ‘கேத்தட்டர்’ தான் வயிற்று வலிக்கு காரணமாக இருக்கும் என நினைத்த அவர் பல்லை கடித்துக்கொண்டு மிக கொடூரமான அந்த வலியை தாங்கிக்கொண்டார்.
அடிவயிற்றில் பயங்கர வலியாக இருப்பதை அவர் டாக்டர்களிடம் கூறினார். அவர்களும் தொற்று தடுப்பு மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை தாராளமாக அள்ளி வழங்கினர். இருப்பினும் அந்த ‘எமகாதக’ வலி மட்டும் குறைந்த பாடாக இல்லை.
சிறுநீர் கழிக்க பொருத்தப்பட்ட கேத்தட்டர் நீக்கப்பட்ட பின்னர் ஆஸ்பத்திரி கழிப்பறையில் மலம் கழிக்க சென்றபோது ‘நான் தான் முன்னே..’ என்று ஏதோ ஒன்று துருத்திக்கொண்டு வெளியேவந்து எட்டிப் பார்த்தது.
பயத்தால் கூச்சலிட்ட ஷரோனின் குரல் கேட்டு நர்சுகள் கழிவறைக்கு வந்து பார்த்தபோது அபரேஷனின் போது டாக்டர்கள் பயன்படுத்திய கையுறைகளில் ஒன்று மீண்டும் ஆபரேஷன் தியேட்டரில் படம் பார்க்கும் ஆவலுடன் வெளியே வர துடிப்பதை கண்டு திகைத்துப் போயினர்.
உடனடியாக, இந்த தகவல் டாக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஷாரோன் பிர்க்ஸ்-க்கு அவசர அவசரமாக மீண்டும் ஒரு ஆபரேஷனை செய்து வயிற்றுக்குள் இருந்த கையுறையை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.
இந்த தவறு எப்படி நடந்தது? என்று டாக்டர்களிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், இச்சம்பவம் தொடர்பாக ஷாரோனிடம் மருத்துவமனை நிர்வாகம் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பும் கேட்டுள்ளதாக ராயல் டெர்பி ஆஸ்பத்திரி தலைமை நிர்வாகி சியு ஜேம்ஸ் கூறியுள்ளார்.
Average Rating