ஆலயத்தில் வழிபடுவதற்கும் நாயாற்றில் படையினர் தடை; மாகாண சபை உறுப்பினர் குற்றச்சாட்டு!!
போர் முடிவடைந்த நிலையில் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நாயாறு மக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு இராணுவத்தினர் தடையாகவுள்ளனர் என்று வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாயாறு பிரதேச மக்களை மாகாண சபை உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இந்தச் சந்திப்புக் குறித்து அவர் தெரிவித்ததாவது:
நாயாறு பிரதேச மக்களின் காணிகளில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இராணுவ முகாம் பகுதிக்குள் அந்த மக்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த ஏற்றத்தடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது.
அந்த மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதான வழிபாட்டுத்தலமான ஏற்றத்தடி பிள்ளையார் ஆலயத்துக்கு விசேட தினங்களில் கூடச் சென்று வழிபட இராணுவம் அனுமதி மறுத்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இந்த ஆலயத்தின் அருகில் புத்தர் சிலை நிறுவப்பட்டு அது பௌத்த வழிபாட்டுத்தலமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
இது தவிர, நாயாறு பாலத்தடியில் உள்ள முனியப்பர் ஆலயத்திலும் வழிபாடுகளை நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கற்பூரம் கொழுத்துவதற்கும், பொங்கல் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் கூட்டமாகச் சென்று ஆலயத்தில் வழிபடுவதற்கும் இராணுவத்தால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மக்கள் தற்போது குடியிருக்கின்ற நாயாறு குடியிருப்பு பகுதியில் வீதியோரத்தில் உள்ள மரத்தின் கீழ் சிறிய வழிபாட்டிடம் ஒன்றை அமைத்து வழிபட்டு வருகின்றனர் அங்கும் சுதந்திரமாக வழிபடமுடியாதவாறு இராணுவக் காவலரண் ஒன்றை ஆலயத்துக்கு மிக நெருக்கமாக இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.
இதனால், ஆலயத்தை சுற்றி வழிபட முடியாத நிலை காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
எனவே, இராணுவ முகாம்களை அகற்றி மக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்ளவும் தமது மதத்தைப் பின்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.
Average Rating