எமது “கடவுள்” விக்கினேஸ்வரன் ஐயா, ஜனாதிபதி அவர்களிடம் சத்தியப் பிரமாணம் செய்தது சரியே -செல்வம் எம்.பி
“தமிழ் மக்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கின்றது. அவை எல்லாவற்றையும் தீர்த்து வைக்கக் கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஐயா தான். அதனால் இவர் எமது கடவுள்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் முதலமைச்சர் மற்றும் அமைச்சாகளை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
“மன்னார் மாவட்ட மக்கள் உங்கள் வருகையையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இம் மக்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. விவசாயம், மீன்படி என எந்த தொழிலை எடுத்தாலும் இங்குள்ள மக்களுக்கு பிரச்சனை தான். அந்த பிரச்சனைகளை தீர்க்கக் கூடியவர் நீங்களே.
நானும் எனது மக்களும் உங்களை கடவுளாக பார்கின்றோம். முதலமைச்சர் ஆகிய எமது ஐயா, நன்கு திட்டமிட்டு ஒவ்வொரு செயற்பாடுகளையும் செய்து வருகிறார்.
ஜனாதிபதி அவர்களிடம் சத்தியப் பிரமாணம் செய்த போது பலர் கத்தினார்கள். பல்வேறு கருத்துக்களை கூறினார்கள். ஆனால் இப்ப நான் உணர்கிறேன் நீங்கள் செய்தது சரி என்று. நன்கு திட்டமிட்டு நீங்கள் செய்கிறீர்கள் அப்படி இருக்கும் போது யாரும் பிழை சொல்ல முடியாது.
உங்களுடைய அறிக்கைகள் கூட நன்கு நிதானமாக யோசித்து வெளியிடப்படுபவை. அவ் அறிக்கைகள் அரசுக்கு சவாலை ஏற்படுத்துகிறது.
எனவே தான் நான் உங்களை கடவுளாக பார்க்கின்றேன். கடவுளுக்கு அடுத்ததாக இந்த மக்களை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
Average Rating