வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார்
தென்னாபிரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றவரும் அந்த நாட்டின் வரலாற்றில் புதிய தொரு மாற்றத்தை ஏற்படுத்தியவருமான நெல்சன் மன்டேலா காலமானார்.
அண்மைக்காலங்களாக உடல்நிலை சரியில்லாமையால் அவதியுற்று வந்த மண்டேலா தனது 95வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
ஜூலை 18ம் திகதி 1918ம் ஆண்டு பிறந்த மண்டேலா, தென்னாபிரிக்க வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைவராக திகழ்கின்றார்.
இவர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராகவும் போற்றப்படுகின்றார்.
தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார்.
இவர்கள் மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர்.
அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடினார் மண்டேலா.
இவரின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது.
மண்டேலா, 1990 இல் விடுதலையான பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாபிரிக்கக் குடியரசு மலர்ந்தது
பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது.
1994 மே 10ம் திகதி அவர் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இதன்மூலம் நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி என்ற பெருமையையும் தன்வசப்படுத்தினார்.
பின் 1999 இல் பதவியை விட்டு விலகியதோடு, 2வது முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார்
உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கும் மண்டேலா, 2008ல் ஜூன் மாதம் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு ‘நேரு சமாதான விருது’ வழங்கியது.
அவரது சார்பில் அவர் மனைவி வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார். 1990-ல் இந்தியாவின் ´பாரத ரத்னா´ விருதும் வழங்கப்பட்டது.
1993இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் திகதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating